பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு முன்பு இதுவரை வழங்கபட்ட 200 லைசன்ஸையும் உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமி ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மாநில துணை செயலாளர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் 10 தினங்களுக்குள் புதிதாக வழங்கப்பட்டுள்ள 200 ரெஸ்டோ பார் உரிமங்களை முதலமைச்சர் ரத்து செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக முத்தியால்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பேசியதாவது;
புதுச்சேரி மாநிலம் சித்தர்கள் வாழ்ந்த பூமி. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாட்டால் தற்போது நவீன கேப்ரே டான்ஸ் பூமியாக புதுச்சேரி மாறி வருகிறது.
மேலும், முதல்வர் ரங்கசாமியின் இது போன்ற செயலை சித்தர்கள் மன்னிக்க மாட்டார்கள் கண்டிப்பாக தண்டிப்பார்கள். குடிப்பதற்கும், கூத்தடிக்கவும் இடம் தேடலில் தான் புதுச்சேரி மாநிலம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
இதில் என்ன அரசுக்கு பெருமை கேட்கிறது? புதுச்சேரியில் ரெஸ்டோ பார் என்ற பெயரில் கேப்ரே டான்ஸ் நடத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தது? இதை ஏன் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தவில்லை? கலாச்சார சீரழிவை ஏற்படுத்தக்கூடிய டான்ஸ்க்கு 2006-ம் ஆண்டே நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனவே பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு முன்பு இதுவரை வழங்கபட்ட 200 லைசன்ஸையும் உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமி ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிமுக தலைமை கழகம் அனுமதி பெற்று நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும். மேலும், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
இவ்வாறு தெரிவித்தார்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.