தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற காரணங்களால் இந்திய பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி காணப்பட்டது.
நாடு முழுவதும் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பழைய நிலையில் இருந்து மக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது உணவு பொருட்களின் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் வரியால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதேபோல், தனியார் பால் நிறுவனம் 1.25 கோடி லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹட்சன் எனப்படும் தனியார் பால் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்போவதாக அறிவித்து உள்ளது. இதேபோன்று, சீனிவாசா பால் நிறுவனமும் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருப்பதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகிறது.
தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனம் லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகரிப்பின் எதிரொலி; முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்