கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையின் பேரில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூரில் வீடு ஒன்றில் திருடப்பட்ட வழக்கில் ராஜசேகரை காவல்துறையினர் சமீபத்தில் விசாரித்துள்ளனர். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அலமாதியில் வசித்து வந்துள்ளார். விசாரணையின் பொழுது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் திருடப்பட்ட நகைகள் செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் இருப்பதாக கூறியுள்ளார். காவல்துறையினர் ராஜசேகர் கூறிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் நகைகளை மீட்கமுடியவில்லை என்று தெரிகிறது. ஆதலால் மீண்டும் ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து 12ம் தேதி காலையில் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது ராஜசேகரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த காவலர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, ஸ்டான்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராஜசேகரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணை கைதி மரணம் அடைந்த தகவல் அறிந்த சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று, ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் யார் யார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்திய மூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ராஜசேகரின் சந்தேக மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு