பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ஹைதராபாத் வந்து, விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.55 மணியளவில் புறப்பட்டு மாலை 5.10 மணியளவில் சென்னை வரவிருக்கிறார். பிரதமரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்க இருக்கின்றனர்.
பின்பு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்ல உள்ளார். சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு, மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளார்.
இதன் காரணமாக சென்னையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், காவல் துறை துணை தலைவர்கள், 29 துணை ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு பிரிவு காவல்படை காவலர்கள், கமாண்டோ வீரர்கள் என மொத்தம் 22,000 காவலர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் செல்லும் வழித்தடங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ள திட்டங்கள்:
- எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து 5 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை திரவ எரிவாயு கொண்டு செல்வதற்கான, சுமார் 1,445 கி.மீ தூரத்திற்கு, ரூபாய் 1,760 கோடி மதிப்பில், எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி இடையே பைப்லைன் தடம்.
- ரூபாய் 760 கோடி மதிப்பில் உலக தரத்தில் சீரமைக்கப்படவுள்ள எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
- தாம்பரம்- செங்கல்பட்டு, தேனி- மதுரை பயணிகள் இரயில் சேவையை தொடங்கி வைக்க இருக்கிறார்.
- ரூபாய் 256 கோடி மதிப்பில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சுமாரி 30 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட 3 ஆவது பாதையை திறக்க உள்ளார் பிரதமர் மோடி.
- ரூபாய் 450 கோடி மதிப்பில் 90.4 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படவுள்ள அகலப்பாதை திட்டம்.
- பெங்களூர்- சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
- ஓசூர்- தர்மபுரி இடையேயான 2-ம் மற்றும் 3-ம் கட்ட நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
- மீன்சுருட்டி- சிதம்பரம் இடையேயான புதிய சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
- சென்னையில் அமைய உள்ள பன்முக தளவாடங்கள் கொண்ட பூங்காவிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இது மட்டுமின்றி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முடிந்த திட்டங்களை திறந்து வைக்கவும் உள்ளார் பிரதமர் மோடி.
மனுநீதிச் சோழன் மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம்…- நீதிபதி கருத்து!