பிரதமர் மோடிக்கு பரிசளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று செய்தியார்களை சந்தித்து பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோயில் மற்றும் வாரணாசி காசி-விஸ்வநாதர் கோயிலின் மாதிரிகள் போன்றவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன.
பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் 28 அடி உயர நேதாஜி சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை வடித்த சிற்பி யோகிராஜ், இந்த சிலையின் மாதிரியை பிரதமர் மோடிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிசளித்தார். அதுவும் இந்த ஏலத்தில் இடம் பெறுகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தாமஸ் கோப்பை போட்டி ஆகியவற்றில் பதக்கங்கள் வென்ற வீரர்களும், விளையாட்டு சாதனங்களை பிரதமருக்கு பரிசாக அளித்துள்ளனர். அவைகளும் இந்த ஆன்லைன் ஏலத்தில் இடம் பெறுகின்றன.
இந்த ஏலம் அக்டோபர் 2-ம் தேதி முடிவடையும். பரிசு பொருட்களில் சில மாடர்ன் ஆர்ட் தேசிய கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதித்தொகை நமாமி கங்கை திட்டத்துக்கு செல்லும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முன்னுரை எழுதியவரே மிஸ்ஸிங் ? ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டில் பங்கேற்காத இளையராஜா