இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி 7 நாட்களாக இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இந்த ஏலம் 40 சுற்றுகளாக நடைபெற்றது.
இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் போனது.
இந்நிலையில், இன்று தில்லி பிரகதி மைதானத்தில் மொபைல் மாநாட்டில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:இந்தியாவில் விரைவில் ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ கார் அறிமுகம்…அதென்ன வகை கார்?
5ஜி நெட்வொர்க் சேவை முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, புனே, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஜாம்நகர், அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களை பயன்படுத்தி வரும் பயனாளிகள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைதொடங்கியிருப்பதால், இந்தப் பண்டிகை காலங்களில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.