தமிழக அரசு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை சீர்குலையும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அனுமதி மறுத்திருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீர்வளத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணியால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு அத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:‘எனக்கு ஃப்ரீ வேண்டா’- ஆவேசத்தின் உச்சத்தில் வாதாடிய ரோஷக்கார மூதாட்டி
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்ககோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மழைக்கு வெள்ளத்தால் மூழ்கிய இடங்களை தண்ணீர் தேங்காத வகையில் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அணை கட்ட ஆய்வுகள் நடந்து வருகிறது.
ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடர்ந்து இருப்பதால், அந்த வழக்குகளின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக கேட்டு பெறுவோம்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் ஓடும் ஆரணியாறு, கொஸ்சதலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்
தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘அமைச்சர் பொன்முடியின் ஓசி பேருந்து பேச்சு பாட்டிக்கு செலவு வைத்துவிட்டது’ என தெரிவித்தார்
மேலும், ‘குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரைவில் முதல்வர் செயல்படுத்துவார்’ எனவும் தெரிவித்தார்.