இந்தியாவில் விரைவில் ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ வாகனங்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதென்ன ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ வாகனம் என்ற கேள்வி எழும்புகிறதா? வாருங்கள் அதைக் குறித்து காண்போம்.
கார்களில் ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ என்ற புதிய வகை இன்ஜீன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வகை இன்ஜீன்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எரிபொருள்களுடனோ, கலப்பு எரிபொருள்களுடனோ இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். கச்சா எரிபொருள் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள்களில் இயங்கக்கூடிய திட்டத்தை இந்தியா கையிலெடுத்துள்ளது.
அதன்படி, எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை இந்தியா தற்போது ஊக்குவித்து வருகிறது. இந்த, கலப்பு விகிதத்தின் அடிப்படையில், E10, E20, E85, E100 என்ற வகைகளில் எரிபொருள்கள் உள்ளன. அதாவது, 90 சதவீத பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனாலை கலப்பது E10 வகையிலான எரிபொருள்.
இதையும் படிங்க:இந்தியாவில் 2050-க்குள் பெட்ரோல், டீசல் பயன்பாடு முழுமையாக நிறுத்த முடியும் – அமைச்சர் பேச்சு!
நம் இந்தியாவில் 2003-ம் ஆண்டு பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டம் தொடங்கிவிட்டது. அப்போது, 2022-ம் ஆண்டு நவம்பருக்குள் 90 சதவீத பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைய வேண்டும் என இந்திய அரசு தீர்மானித்திருந்தது. அதன்படியே, E10 இலக்கை இந்தியா அடைந்தது.
இந்தியாவில் தற்போதைய தகவலின்படி, பெட்ரோல், டீசல், எத்தனால், ஹைட்ரஜன் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ இன்ஜீன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகையில் எரிபொருள் கலப்பு, எரிபொருள் உமிழ்வு, எரிபொருள் செயல்பாட்டை காரில் இருக்கும் ECM எனும் மின்கட்டுப்பாட்டு அமைப்பு கண்காணிக்கும்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 6 கோடி ஃப்ளக்ஸ் ஃபியூல் வாகனங்கள் நடைமுறையில் உள்ளன. பெட்ரோலில் 10% எத்தனாலை நாம் கலக்கும் இதே நேரத்தில் பிரேசில், அமெரிக்காவில் 100% எத்தனாலால் இயங்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. நாமும் தற்போது அதை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பகுதியாக இந்தியா E20 வகையிலான பெட்ரோல் கலப்பை 2025-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பில் பெரிய சவால்கள் நிறைந்திருந்தன. அதன்படி, தலையாய சவாலாக இருப்பது தண்ணீர் நெருக்கடி. இந்தியா நிர்ணயித்துள்ள கலப்பை அடைய 1016 கோடி லிட்டர் எத்தனால் அவசியமென நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய எத்தனால் உற்பத்தி வருடத்திற்கு 426 கோடி லிட்டராக உள்ளது. மேலும், 1 லிட்டர் எத்தனாலுக்கு தேவையான கரும்பை விளைவிக்க 2,860 லிட்டர் நீர் அவசியம்.
இப்படியான நெருக்கடியில்தான், இந்தியா E20 வகையிலான பெட்ரோல் கலப்பை 2025-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு உதவும் வகையிலேயே இந்தியாவில் ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்தியாவில் டொயோட்டோ நிறுவனம் ‘ஃப்ளக்ஸ் ஃபியூல்’ இன்ஜினுடன் கூடிய காரை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.