இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த நெருக்கடியால், இலங்கையில் உணவு, சுகாதாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் விளைவாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
போராட்டத்தின் மத்தியில், அதிபர் மாளிகையில் இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அதிபர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறை ஆதரவாக செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான உடமைகள் இலங்கைக்கு சொந்தமான கடற்படை கப்பலில் ஏற்றப்படுவது போன்ற காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப் போவதாக தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
To ensure the continuation of the Government including the safety of all citizens I accept the best recommendation of the Party Leaders today, to make way for an All-Party Government.
To facilitate this I will resign as Prime Minister.
— Ranil Wickremesinghe (@RW_UNP) July 9, 2022
சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்: அதிபர் மாளிகை முற்றுகை