காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு மோடி வருகை தருகிறார்.
திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது, காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
மேலும், இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டமளிப்பு விழாவுக்காக 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பிரதம் வருகையை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்