பிரியாணி கேட்டதால் மனைவி பத்மாவதியை தீ வைத்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் மற்றும் பத்மாவதி தம்பதியினர் வசித்து வந்தனர். 75 வயதான கருணாகரன் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதிக்கு 65 வயதாகிறது.
இந்நிலையில், கருணாகரன் பத்மாவதி தம்தியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருகின்றனர்.
கருணாகரன் மற்றும் பத்மாவதி தம்பதியினருக்கு, இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால்தான், கருணாகரன் மற்றும் பத்மாவதி தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு கருணாகரன் வீட்டிற்கு பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு, கருணாகரனிடத்தில் பெரும் கோவத்தை ஏற்படுத்த, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது மனைவி பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது, பத்மாவதி கத்திக்கொண்டே கருணாகரனையும் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, கருணாகரன் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் நுழைந்து தீயை அணைத்து பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். கருணாகரன் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அயனாவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குறைந்து வரும் கொரோனா: இந்தியாவில் புதிதாக 811 பேருக்கு தொற்று உறுதி..!