மதுரை நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட நடுபட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சுரேஷை உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்பு, சுரேஷ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.
இதனைக் கேட்ட சுரேஷ், நீதிமன்றத்தில் இருந்து திடீரென ஓட ஆரம்பித்தார். இவரைப் பிடிக்க அங்கிருந்தவர்கள் ஓடினர். இருப்பினும் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஓடிய சுரேஷை மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்