முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் கடந்த ஒன்பதாம் தேதி அறிவித்தது. ஏறத்தாழ 32 ஆண்டுகால சிறை வாழ்வுக்கு பிறகு தற்போதுதான் பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதற்கு அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும், சமூக தொண்டாற்றுபவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். பொதுமக்களும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
பலர் பேரறிவாளனின் பிணையோடு நின்றுவிட கூடாது என்றும், ஏழு தமிழர்களின் விடுதலை குறித்த முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு பிணை ஆணை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வந்துள்ளது. தற்போது பரோலில் தனது வீட்டில் இருக்கும் பேரறிவாளன், காவல்துறை வழங்கிய பரோலை ரத்து செய்துவிட்டு பிணை ஆணையின் நகலை பெற புழல் சிறைக்கு சென்றார். திருப்பத்தூரில் இருந்த அவர் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன்தான் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று பிணை ஆணையை வழங்கப்பட்டுவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் புழல் சிறைக்கு சென்ற பேரறிவாளனுக்கும், காவல்துறையினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆம்! உச்ச நீதிமன்றத்தின் பிணை ஆணையின் நகல் புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வந்து சேராததால் பேரறிவாளனுக்கு பிணை ஆணை வழங்கப்பட முடியவில்லை என்று சிறைத்துறை கூறியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பரோலிலேயே பேரறிவாளன் இருப்பார் என்றும் அறியப்படுகிறது. இதனால் பரோலை ரத்து செய்ய சென்ற பேரறிவாளன் வீடு திரும்பினார்.
இதையும் படிங்க ; பேரறிவாளனின் பிணை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆனாலும் நிரந்தர விடுதலை ? – அன்புமணி இராமதாஸ்