ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது குறித்து அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளன் பிணையில் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அப்போதைய அரசு முடிவு செய்த போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்ததால் தான் பேரறிவாளனின் விடுதலை 10 ஆண்டுகளாக தாமதம் ஆனது என்றும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை நினைவு கூர்ந்த அன்புமணி அவர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிகழ்வை தனது அறிக்கையில் பதிவிட்டார்.
இந்நிகழ்வுகள், ஏழு தமிழர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லாத நிலையில் அதை தாமதப்படுத்துவதற்காக நடந்த முயற்சி தான் என்றும், இவ்வளவு தடைகளுக்குப் பிறகும் பேரறிவாளன் நடத்திய மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் பயனாகவே அவருக்கு இப்போது பிணை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு பிணை வழங்கக்கூடாது என்று மத்திய அரசின் சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட, அதை புறந்தள்ளிவிட்டு, பேரறிவாளனின் சிறை நடத்தை, சிறையில் படித்து பட்டங்களைப் பெற்றது, பரோல் காலத்து நடத்தை, உடல்நல பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது எனவும் மனித உரிமைகளை காக்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் சிறப்பானது எனவும் அன்புமணி இராமதாஸ் பாராட்டினார்.
இதோடு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என்பதை இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை அன்புமணி இராமதாஸ் அவர்களும் சுட்டிக்காட்டினார்.
அறிக்கையின் இறுதியாய், ‘பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவதற்கு ஆயிரமாயிரம் நியாயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நல்லத் தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை பாமகவுக்கு உண்டு. அடுத்த சில வாரங்களில் பேரறிவாளனும், அவரைத் தொடர்ந்து பிற தமிழர்களும் நிரந்தரமாக விடுதலை ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாகவே, ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து, அவர்களை விடுதலை செய்வதன் மூலம் தமிழக ஆளுனர் மாளிகை இந்த விஷயத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளலாம்’ என்று அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.