திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் என்று சொல்லப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகும். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில், பகல் பத்து உற்சவத்திற்கு பின், இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.
ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட சிறப்பு ஆபரணங்களை அணிந்துகொண்டு சுவாமி கருவறையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டார். ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகோட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று வழியாக நம்பெருமாள் பரமபத வாசல் வந்ததும் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் ‘கோவிந்தா’ என முழக்கமிட்டனர். பரமபதவாசல் திறப்பு காரணமாக திருச்சியில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம் முதல் கன்னி வரை