அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளில் வேறு யாரும் வரவு செலவுகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சி உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதிமுக கட்சியின் பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளருக்கு வழங்க அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின்படி இன்றுவரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கும் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைக் கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் அதிமுக வங்கி கணக்குகளுக்கு உரிமை கோருவதால், யாரை அனுமதிப்பது என வங்கி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று