கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜூலை 14-ம் தேதி, முதல் முறையாக கேரளாவில் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த 35 வயதுடைய ஒரு ஆணின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதியானதை அடுத்து, அவர் திருவனந்தபுர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நபருடன் பயணித்தவர்களுக்கு நோய் தொற்று பரவியதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 13-ம் தேதி 31 வயதுடைய அந்த நபர் துபையிலிருந்து கேரளா வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கும் குரங்கம்மை நோய் இருக்கலாம் என சுகாதாரத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதியானது.
இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு ஜூலை 14-ம் தேதி உறுதிசெய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபருக்கு கடந்த ஜூலை 18-ம் தேதி குரங்கம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகை மிரட்டும் குரங்கம்மை நோய்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு