வடகொரியாவின் ஏவுகனை சோதனைகள் இந்தியா உள்பட பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும்படி உள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இச்சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதில் வட கொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகளுக்கு எதிராக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முதல் ஒருநாள் போட்டியில் வீழ்ந்த இந்தியா… சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்!
மேலும், வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளான இந்தியா, அல்பேனியா, பிரேஸில், அயர்லாந்து, ஜப்பான், நார்வே, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தன.
இதையடுத்து, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘இதுபோன்ற சோதனைகள் இந்தியா உள்பட பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக உள்ளன. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதித்து வட கொரியா நடந்துகொள்ள வேண்டும்.
தெற்குலக நாடுகள் ஏற்கெனவே, பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.