முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி, இதுவரை நடைபெற்ற இரு இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடபெற்றது.
முதலில் நேற்று மதியம் 2 மணியளவில் இந்த ஒருநாள் போட்டியானது தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மழைக்காரணமாக ஒருநாள் போட்டி நேற்று மதியம் 3.45 மணிக்கு தொடங்கியது. மேலும், தாமதம் காரணமாக 50 ஓவர் போட்டி 40 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது.
இதன்பின், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கில் களம் கண்டது. யானமேன் மலான் 22 ரன்களுக்கும், குவின்டன் டி காக் 48 ரன்களுக்கும் வெளியேறினர். சீரான இடைவெளியில் அணியின் ஸ்கோர் உயர்ந்துக்கொண்டிருந்தது. இந்த சூழலில்தான், ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களுடனும், டேவிட் மில்லர் 75 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
40 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் கண்டது. ஆனால், இந்திய அணி பேட்ஸ்மென்கள் திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.
கேப்டன் ஷிகர் தவன் 4 ரன்களுக்கும், சுப்மன் கில் 3 ரன்களுக்கும், அறிமுகமாக களமிறங்கிய ருத்ராஜ் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மேலும், அடுத்தடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 20 ரன்களுக்கும், ஷர்துல் தாக்குர் 33 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி மோசமாக தடுமாறியது. இருப்பினும் ஒருபுறம் சஞ்சு சாம்சன் 86 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.
முடிவில் இந்திய அணி 40 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.