வட கொரியாவை அச்சுறுத்தும் நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.
வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சி நடைபெற்று வருகிற நிலையில், வட கொரிய அரசு உலகின் பல நாடுகளுக்கும் எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
வடகொரியா பல நாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தனது அண்டை நாடான தென் கொரியாவை அச்சுறுத்த இந்த ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்துகிறது.
அணு ஆயுதங்களை சோதிக்க கூடாது என்று உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் வட கொரிய அரசு கையெழுத்திடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 25க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனிடையே, நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் வகையில் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய திறன் உடையது ஆகும்.
இதைத்தொடர்ந்து பேசிய அதிபர் கிம் ஜாங் உன், வட கொரிய அரசு பலமாக இருக்கிறது. எங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பவர்களுக்கு அணு ஆயுதம் மூலம் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். முழுமையான அளவில் மோதல் வந்தாலும் அதை எதிர்கொள்ள வட கொரியா தயாராக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் அதிபர் கிம் தனது மகளுடன் சென்று ஏவுகணை சோதனையை பார்வையிட்டுள்ளார். அதிபர் கிம்மின் மகள் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.