புதுச்சேரி அரசு பள்ளிகளில் உணவின் தரம் குறித்து பெற்றோர்கள் கூறிய புகார் தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து சுவைத்து பார்த்த போது மதிய உணவு தரமில்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் கல்வித்துறை அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள கொடாத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் ரூ.31லட்சத்து 50 ஆயிரம் செலவில் வகுப்பறை கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டார். அப்போது, மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் உணவு தரமின்றி இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு மாணவர்களுக்கு மதிய உணவுக்காக வழங்க தயாராக இருந்த புளியோதரையை அமைச்சர் நமச்சிவாயம் ருசித்து பார்த்தார். சாதம் சரிவர வேகாமலும், சுவை இன்றியும் இருந்தது. இதனால் கோபமடைந்த அமைச்சர் நமச்சிவாயம், முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேருவை அழைத்து உணவு எவ்வாறு உள்ளது? என சாப்பிட்டு பார்க்குமாறு கூறினார்.
மேலும், உணவின் தரம் சரியில்லாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகளை கோபமாக கடிந்துகொண்டார். இது தொடர்பாக தனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டு அண்ணா பதக்கத்துக்கு வீர தீர செயல் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு