இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் பயன்பாடு முழுமையாக நிறுத்த முடியும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பிளக்ஸ் இன்ஜின் கொண்ட கார்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியுள்ளதாவது:
3 முதல் 4 மாதத்தில் அனைத்துக் கார் உற்பத்தியாளர்களும் தங்களது வாகனத்தைப் பிளக்ஸ் இன்ஜின் கொண்டு தயாரிக்க வேண்டும் என உத்தரவை நான் வெளியிட உள்ளேன்.
பிளக்ஸ் இன்ஜின் கொண்ட கார்கள் தயாரித்தால் ஒன்றுக்கும் அதிகமாக எரிபொருள் அதாவது, பெட்ரோல், டீசல், பயோ டீசல் என எந்தப் பொருள் பயன்படுத்தினாலும் வாகனங்களை எளிதாக இயங்க முடியும். இதன்மூலம், எரிபொருள் இறக்குமதியில் பெரும் மாற்றத்தை நம்மால் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!
மேலும், இந்தியாவில் மாசுபாட்டை அதிகரிக்கும் எரிபொருளை பயன்படுத்துவதை நிறுத்தவும், தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகள் வெளியாவதைத் தடுக்கும் விதமாகவும், இதேவேளையில் நுகர்வோருக்கு மலிவான விலையில் கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே பிளக்ஸ் இன்ஜின் பயன்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை 110 ரூபாய் வரையில் விற்கப்படும் நிலையில், பயோ எத்தனால் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்று எரிபொருள் திட்டத்தின் மூலம் மாசுபாட்டை குறைப்பது மட்டும் அல்லாமல் அந்நிய செலாவணியும் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் பயன்பாடு முழுமையாக நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.