தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது
நாற்பது வயதான பரக்கத்துல்லா ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிழக்கு தெருவை சேர்ந்தவராவார். இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட தலைவராகவும், மாநில மீனவர் அணி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால், பரக்கத்துல்லா வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை நடைபெறுவதை குறித்த தகவல் எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடத்தில் வேகமாக பரவ, பரக்கத்துல்லா வீட்டின் முன்பு அக்கட்சியினர் வேகமாக குவிந்து வாக்குவாதத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவனத்தில் புகுந்து திமுக எம்எல்ஏ அராஜகம்.. போலீஸ் வழக்கு பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் பரக்கத்துல்லா வீடு மட்டும் அல்லாது, தேனி மாவட்டம், கோவை, நெல்லை, மதுரை என எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் சார்ந்த பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.