தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் வெளியிட்டதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் கடந்த 11 ஆம் தேதி தமிழக முதல்வரை, அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலத்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் தான் கூறியதாகவும், அவதூறான வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுதுக்கு அனுப்பியிருந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பாஜக அண்ணாமலையின் உதவியாளரான கிருஷ்ணகுமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு நாள் வருமானம் ரூ.102 கோடி! சகோதரருக்கே இப்படின்னா அப்ப அதானியோட வருமானம்?