திமுக சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் புகுந்து ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சென்ற திமுகவைச் சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி கைகால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
மறைமலை நகரில் மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த இடத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்து, அங்கு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பூஜா கோயல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லியுள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடையாத காரணத்தினால், அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த நிலத்தின் உரிமையாளரான பூஜா கோயல் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரை அணுகி, அவருடைய இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை வெளியேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அந்த இடத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனிடையே இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் அதிகமாகியுள்ளது.
இந்த வாக்குவாதம் நடைபெற்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
For the kind attention of #DMK leadership and pertinent #LawEnforcement about a few excesses of their legislators in #Tambaram area
Video Information Credits: #Whatsapp pic.twitter.com/lv8xpxVits
— Deepak Kumar Vasudevan (@lavanyadeepak) September 22, 2022
இதுகுறித்து தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறோம். 20 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்குமுன் இருந்த இந்த நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.கே.சர்மா இந்த நிறுவனத்தில் ரூ.230 கோடி ஊழல் செய்துவிட்டு தகவல் ஏதும் தெரிவிக்காமல் தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பாக நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்மா 2008-ம் ஆண்டு குறைந்த விலைக்கு வட மாநிலத்தை சார்ந்த ஒருவருக்கு இந்த இடத்தை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த இடத்தை காலி செய்ய சொல்லி தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று காலை எங்கள் அலுவலகம் வந்து மிகவும் தர குறைவாக நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, ‘மறைமலைநகரில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் என் நண்பருக்கு சொந்தமானது. அவரை அந்த இடத்தில் நுழைய விடாமல் அந்த நிறுவன நிர்வாகிகள் தடுத்து வருகின்றனர். இதனால் என்ன பிரச்சினை என்பதை கேட்கவே நான் அங்கு சென்றேன்.
எம்எல்ஏ என்றும் பாராமல் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.இது தொடர்பாக இன்று காலை அதே நிறுவனம் முன்பு உரிய ஆவணங்களுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த ஆறு மாதத்துக்கு முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி என்பவரும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.