Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்22 ஆண்டுகளாக வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் நீதி

    22 ஆண்டுகளாக வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் நீதி

    சென்னை: வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும்; அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை (Seniority List) வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

    வணிகவரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று கூறி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பளித்தது.

    இதையும் படிங்க: ராகுலின் பாதயாத்திரை விளம்பர பேனரில் ‘சாவர்க்கர்’ படம்; கேரள காங்கிரஸில் அடுத்த சர்ச்சை

    அதன்படி, 2000-ஆவது ஆண்டு முதல் மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அறிவித்ததுடன், மாறுதல் மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி வணிகவரித் துறை பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த வணிகவரித்துறை நிர்வாகம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. 

    இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான இன்னொரு வழக்கில் கடந்த 29.11.2021 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், 1981 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான பணிமூப்பு பட்டியலை இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்; அதன்பிறகே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிமூப்பு பட்டியலை வணிகவரித்துறை நிர்வாகம் வெளியிடாமல் தாமதிக்கிறது.

    வணிகவரித்துறை பணியாளர்களின் சட்டப்பூர்வ உரிமையைத் தான் கோருகிறார்கள். அவர்களுக்கு நியாயப்படியும், சட்டப்படியும் வழங்கப்பட வேண்டிய மாறுதல் அடிப்படையிலான நியமனம் என்ற பதவி உயர்வு கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். மற்றொருபுறம் நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாததால், நூற்றுக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதனால் வணிகவரித்துறை அதிகாரிகளின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையின் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வும், சமூக நீதியும் வழங்கப்படாததால், அத்துறையில் பணிச்சுமை அதிகரித்து, பணிகள் முடங்குவது வணிகவரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களை பாதிக்கும்.

    அதுமட்டுமின்றி, 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குப் பிறகும் வழங்க மறுப்பது நியாயமற்றது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற பொன்மொழிக்கு இது உதாரணம் ஆகிவிடக்கூடாது.

    வணிகவரித்துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் 1981 முதல் 2020 வரையிலான வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; அதனடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிகவரித்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....