கேரளாவில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோமீட்டர் தூரம் மற்றும் 150 நாட்கள் வரை இந்த நடைபயணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ராகுல் தற்போது 15-வது நாளாக கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், கேரளாவில் ராகுல் காந்தியை வரவேற்க பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்
இந்நிலையில், நேற்று ராகுல் காந்தியின் 14-வது நாள் நடைபயணத்தின் போது அவரை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் வைக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சாலையின் ஓரத்தில் நீளமாக வைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சாவர்க்கரின் படம் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட போஸ்டரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, சாவர்க்கரின் புகைப்படத்தை அகற்றி, அந்தப் புகைப்படத்தின் மேல் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர். மேலும், அச்சிடத்தில் ஏற்பட்ட தவிறினால் மகாத்மா காந்திக்கு பதிலாக தவறுதலாக, சாவர்க்கரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் விளக்கம் தந்துள்ளனர்.