கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜீனில் சிக்கி ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து பாட்னா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்னையைக் கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் வேளையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனைக் கவனித்த ரயில் ஓட்டுநர் சத்தமாக ஹாரன் அடித்தார்.
இதன் காரணமாக பதற்றம் அடைந்த அந்த நபர், தண்டவாளத்தின் மைய பகுதியை நோக்கி தவறுதலாக குதித்துவிட்டார். அப்படி அவர் குதிப்பதற்கும் ரயில் வந்ததற்கும் நேரம் சரியாக இருந்ததால், என்ஜீனின் முன்பக்க கொக்கியில் அவரது தலைப்பகுதி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு அந்த நபரின் உடல் இழுத்து செல்லப்பட்டு, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சிவப்பு சிக்னல் காட்டப்பட்டு அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிகழ்வு ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவனத்தில் புகுந்து திமுக எம்எல்ஏ அராஜகம்.. போலீஸ் வழக்கு பதிவு