புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உரிய வழிகாட்டுதல் அறிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு நெருங்கிவிட்டது. கொரோனா காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நிகழாண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்களும், ரிசார்ட்டுகளும் பல முன்னெடுப்பை நிகழ்த்தி வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பரவல் உலக நாடுகளில் அதிகரித்து வருவதால், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக காவல்துறை வழிகாட்டுதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை.
- டிசம்பர் 31 இரவு புத்தாண்டின்போது கடற்கரைகளில் கூடும் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட அனுமதி இல்லை.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
- வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்படும்.
- வழிபாட்டு தலங்களில் குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
- கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவோர் காவல்துறையின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போன்றவைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தாண்டையொட்டி டிசம்பர் 31-ல் மாலை முதல் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.