ஒரு டிக்கெட்டிற்கு ஒரு பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் கூறி ரசிகர் ஒருவர் சேலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் திரையரங்கு ஒன்று இயங்கி வருகிறது. மிகவும் பிரபலமான அந்த திரையரங்கில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் கூறி ரசிகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே மட்டுமின்றி திரைப்பிரியர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக இப்படி கட்டாயப்படுத்துகிறீர்கள் என சம்பந்தப்பட்ட நபர் எழுப்பிய கேள்விக்கு, கேன்டீன் ஊழியர்கள் பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து செல்லும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:உலகளவில் இத்தனை கோடி வசூலா….அசரவைக்கும் பொன்னியின் செல்வன்!
முன்னதாக, இந்த திரையரங்கில் சுகாதரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த திரையரங்கில் சோதனை நடத்தி தரமற்ற குளிர்பானங்கள், பால் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில்தான் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு பாப்கார்ன் கட்டாயம் என்ற பிரச்சனை உருவெடுத்துள்ளது.
இந்த திரையரங்கம் தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருவதால் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.