20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு அரியலூர் அருகேயுள்ள சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2008-ம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. மேலும், இந்த வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பின்பு, 2012-ம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் ஜெர்மன் நாட்டில் இருந்த சுபாஷ் சந்திரகபூரை, சர்வதேச காவல்துறை உதவியுடன் இந்தியாவிற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவ் அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ஶ்ரீராம், பார்த்திபன், பிச்சுமணி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பாஷ் சந்திர கபூரூம், பாக்கியகுமாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு பயணிக்கையில் பிச்சுமணி அப்ரூவராக மாறினார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவ் அசோகன், பாக்கியகுமார் உள்பட 3 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 8 ஆயிரம் அபராதமும் விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாரிச்சாமி, ஶ்ரீராம், பார்த்திபன் ஆகிய மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூபாய் 8 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வான் மோதல் எதிரொலி: இந்திய வீரர்களுக்கு ஆயுதமில்லா போர் பயிற்சி..