கல்வான் மோதல் காரணமாக இந்திய வீரர்களுக்கு ஆயுதமில்லா போர் பயிற்சி முறைகள் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை ஐடிபி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது. ஆனால், சீன தரப்பில் 45 பேர் உயர்ந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமும், 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பும் தெரிவித்திருந்தன.
மேலும் இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி பதிக்கப்பட்ட கம்புகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியர்களை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில், வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி முறையில் ஐடிபி மாற்றங்களை செய்து வருகிறது.
அதன்படி, ஹரியானா மாநிலம் பஞ்குல்லா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பணியில் உள்ள வீரர்கள் மற்றும் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கும் மூன்று மாத காலங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜூடோ கராத்தே மற்றும் இஸ்ரேல் தற்காப்பு கலை ஆகிய தற்காப்பு கலைகள் உட்பட மொத்தம் 15 முதல் 20 வகையான ஆயுதமில்லா போர் நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 20 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐடிபி ஐஜி சிங் துஹான், ‘இந்த பயிற்சியில் எதிரியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வது பதில் தாக்குதல் நடத்துவது குறித்த நுட்பங்கள் சொல்லித் தரப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற வீரர்களால் எதிரியை நகரவிடாமல் செயலிழக்கவும் செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது: உற்சாக நடைபோட்டு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி..