மோர்பி பாலம் விபத்து தொடர்பாக அந்நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135-ஆக அதிகரித்த நிலையில், சுமார் 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, இந்த விபத்துக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டறிய ஆணையிட்டார்.
இதைத்தொடர்ந்து, இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் பாலச் சீரமைப்பு ஒப்பந்ததாரரான ஒரேவா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோர்பி பாலம் விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நவம்பர் 9-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- பாலச்சந்திரன் அறிவிப்பு