தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி காலை சுமார் 9 மணியளவில், ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த திரு.சார்லஸ் (வயது 38), திரு.பிருத்விராஜ் (வயது 36), திரு.தாவீதுராஜா (வயது 30), திரு.பிரவீன்ராஜ் (வயது 19), திரு.ஈசாக் (வயது 19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாயகம் திரும்பினர்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு