நியாயக் விலை கடையில் மக்கள் விரும்பும் பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதிநகர் பகுதியில் உள்ள மக்கள் அங்காடிக்கு, நேற்று நேரில் சென்ற மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே, அந்தக் கடையில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் கையிருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சுதன்சு பாண்டே,
கொரோனா நேரத்தில் எப்படி மக்களின் உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டது; நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அளவை எப்படி அதிகரிப்பது குறித்து ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் குறைந்த மழைப்பொழிவு பெறும் மாவட்டம் என்பதால் இந்த மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள் உற்பத்தி குறைந்த அளவில் இருக்கிறது. அதனால், நியாய விலைக் கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில், மக்களுக்கு கூட்டுறவு கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் தரமான, மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அரசு சார்பில் மக்களுக்கு தேவையான கோதுமை, அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய நான்கு முக்கிய அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசு சார்பில் பாமாயில், பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
நியாயவிலைக் கடைகளில் மக்கள் விரும்பும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும்; விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால், ஊழியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள், நியாய விலைக் கடைகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாயகம் திரும்பினர்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு