மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.
தாய்லாந்தில் வேலை இருப்பதாக 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இவர்கள், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் அவர்கள் சட்டவிரோத செயல்களை செய்ய மறுத்ததால், மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தண்டிக்கப்பபட்டதாகவும் , பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மியான்மரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும் அவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டு, மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்கள் 13 பேர், நேற்று இரவு தில்லி வந்தனர்.
இதன்பின் தில்லியிலிருந்து விமானம் மூலமாக இன்று அதிகாலை 2.20 மணியளவில் 13 நபர்களும் சென்னை வந்தனர்.
அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
இதையும் படிங்க: ‘தளபதி 67’ படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் – படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?