திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று சாயிரட்சை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வன்னிகாசுரன் வதம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
இதையடுத்து, அருள்மிகு சண்முகர் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது, பழனி ஆதீனம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கோயிலின் உள்ளே சென்றார்.
அப்போது, தடுப்புகளை வைத்து புலிப்பாணியை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்தனர். இதுகுறித்து கேட்டதற்கு, இது அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் என்றும் அதனால், உங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:‘தளபதி 67’ படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் – படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?
இதன் காரணமாக, இந்து முன்னணியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல நூறு ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவின் போது, சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க புலிப்பாணி சுவாமிகளுக்கே உரிமையுண்டு எனவும் ஆனால், இப்போது வேண்டுமென்றே கோயில் அதிகாரிகள் இடையூறு செய்வதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, புலிப்பாணி சுவாமிகளுக்கு வழக்கமாக கண்காணிப்பாளர் மரியாதை செலுத்த வேண்டும் எனவும், ஆனால் இப்போது பேஸ்கார் என்று சொல்லப்படும் உள்துறை அலுவரை அனுப்பி மரியாதை செய்யப்படுவது புலிப்பாணி சுவாமிகளை அவமதிக்கும் செயல் என்றும் இந்து முன்னணியினர் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சமாதானம் செய்தனர்.
பிறகு, சக்திவேல் வாங்கும் நிகழ்வு அமைதியாக நடந்தது. இருப்பினும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.