தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பொறியியல் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டங்களை வழங்கினார்.
இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவில் பொன்முடி பேசியபோது, ‘நிகழ் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ்ப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், ‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் உள்ளது. பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ்மொழியை படிக்க வேண்டும். அதேசமயம், விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியை படிக்கலாம். முக்கியமாக யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு மொழியில் படிக்குமாறு கூறக்கூடாது’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக, மருத்துவ பாடப்புத்தகங்களில் 25 பாடப்புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட உள்ளதாகவும், அதில் 13 பாடப் புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்களை தமிழில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சியின் அவலம்: துணியை கட்டி மழை தண்ணீரை அகற்றிய ஊழியர்கள்!