பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வரும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உளவுத்துறை நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யும் பகுதிகளில் இருக்கும் பயிற்சி முகாம்களில் கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் அவர்களின் செயல்பாடுகளும் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை நிறுவனங்கள் கூறியுள்ளன.
இது தொடர்பாக வெளியான எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அதிகம் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளன. பனிப் பொழிவுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இப்படியொரு உணவகம் போன அனுபவம் உண்டா? வாடிக்கையாளர்களை கவர இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி
தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் எல்லைக்கு அருகே மாற்றப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டியுள்ள வீடுகள் தீவிரவாத முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டியுள்ள மசில், கெரன் மற்றும் குரேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களுக்கு 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வந்துள்ளனர்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத்தொடர்ந்து, பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு சமயத்திலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வரும் காஷ்மீர் பகுதிகளில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் கடும் தீவிர வாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் 20 க்கும் மேற்பட்ட முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முகாம்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுக்கு தேவைப்படும் உதவிகளை பாகிஸ்தான் ராணுவமும் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பும் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்: அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்