மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 8,010 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலத்தின் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைகள் நிரம்பி வருவதால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதிக நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 3,149 கன அடி வீதம் நீர் வந்துக் கொண்டிருந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை வினாடிக்கு 8,010 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்தாலும் அணைக்கு அவரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.29 அடியிலிருந்து 98 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 62.27 டி.எம்.சி.யாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 1,04,356 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்