நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோயில். இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமைய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வருவது வழக்கம்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் தேருக்கு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து, காலை 9 மணி அளவில் தேரோட்டமும் தொடங்கியது. இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆனித் தேரோட்டத்தையொட்டி, பாதுகாப்பு பணியில் 1500 காவலர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே, ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று, நெல்லை மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்புக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு