சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவத்தை அளிக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசு முன்வர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
மெஹ்தாப் எனும் 16 வயது மாணவன் மரபணுக்களில் இருக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றங்களினால் “டவுன் சிண்ட்ரோம்” என்ற குறைபாடுகளுடன் இருப்பவர். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லிட்டில் ஃபளவர் பள்ளியில் சிறப்பு மாணவர்களுக்கான பிரிவில் படித்து வந்தார்.
இந்நிலையில், இவர் பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மெஹ்தாப் படித்து வந்த பள்ளியில் ஒரே சமயத்தில் அப்பள்ளியின் முதல்வரும், சிறப்பு மாணவர்களுக்கு கற்றுத்தரக் கூடிய ஆசிரியரும் ஒருசேர பள்ளியை விட்டு நின்றுள்ளனர். இதனையடுத்து புதிதாக பள்ளி முதல்வராய் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
மெஹ்தாப்பின் தாய், புதிய பள்ளி முதல்வரிடம், சிறப்பு ஆசிரியர் பள்ளியை விட்டு நீங்கியதில் இருந்து பள்ளி முன்புபோல் இல்லை என்று கூறியுள்ளார. இதையடுத்து பள்ளி முதல்வரும் பள்ளியை பழைய நிலைமைக்கு கொண்டு வர நான் சில திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். ஆனால், பள்ளியில் முன்னேற்றம் ஏதும் தெரியவில்லை. மாறாக, பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மெஹ்தாப் பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.
இது தொடர்பாக, மெஹ்தாப்பின் தாய் ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். 2019-ம் ஆண்டு இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசு வழக்கறிஞர்களிடம், சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதற்கான தேவைகள் பற்றி அறியாமையால் இருப்பதாக தெரிவித்தனர். அதேவேளையில், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவத்தை அளிக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில அரசு முன்வர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.