நடப்பு நீர் பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஜூலை 16 ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அதன்பிறகு, அப்பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக நீர்வரத்து குறைந்ததாலும், டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து மீண்டும் பருவமழை தீவிரமடைந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால், அக்டோபர் 12 ஆம் தேதி மீண்டும் நடப்பு நீர் பாசன ஆண்டில் 2-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வரை 120 அடியிலேயே நீடித்தது.
இதையடுத்து பருவமழை குறைந்ததால், மீண்டும் காவிரி பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதால், மீண்டும் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை நிரம்பியதால், வலது கரை மற்றும் இடது கரை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
‘குந்தவையும், வானதியும் ஆட… ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க… ‘ – பொன்னியின் செல்வன் வெளியிட்ட வீடியோ..