நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 100-வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு சாலையில் குத்தாட்டம் போட்டபடி நடனமாடியபடி சென்றார்.
நாடகத்தந்தை எனப்போற்றப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவராக விளங்கினார் சங்கரதாஸ் சுவாமிகள்.
கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் திரைப்படங்களில் கலைஞர்கள் உருவாக காரணமாக இருந்தவர் என்பதால் தமிழ் நாடகத்தலைமையாசிரியர் எனவும் அழைக்கப்படும் இவரது சமாதி கருவடிகுப்பத்தில் உள்ள இடுகாட்டில் புதுச்சேரி அரசால் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவு நாளில் தமிழ் திரைப்பட கலைஞர்கள், நாடக கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று அவரது 100-வது நினைவு நாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகபண்பாட்டு மையம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பரை இசை கலைஞர்கள், பாரம்பரியக்கலைக்குழுவினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பல கலைஞர்கள் தெருக்களில் கூத்தாடியும், பல்வேறு இசைக்கருவிகளை வாசித்தும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு பெருமை சேர்த்தவாறு ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தின் போது புதுசேரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஜய் ஆண்டனி கலைஞர்களின் ஊர்வலத்தில் பாங்கேற்று சாலையில் கூத்து கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். பின்னர் அனைவரும் கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சமாதியில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்