சாஃப்ட்வேர் ஹேக்கிங் மூலம் 1.25 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பக்கத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு, கூடுதல் தொகைக்கு விற்பனைச் செய்யப்படுவதாகப் பாதுகாப்பு படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சட்டத்திற்கு விரோதமான மென்பொருளைப் (Software) பயன்படுத்தி வந்த இரண்டு கடைகள் சிக்கின.
அந்தக் கடைக்கார்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீகார் மாநிலம், தானாபூர் பகுதியைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவர் அந்தச் சட்டவிரோத மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: முன்னேறிய இந்திய அணி…சத்தமில்லாமல் ஒரு சாதனை!
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், பீகார் மாநிலத்துக்கு விரைந்து சென்று, அந்த இளைஞரைக் கைது செய்து பிறகு தமிழகம் அழைத்து வந்தனர்.
மேலும், இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத மென்பொருளை, நாடு முழுவதும் 3,484 பேரிடம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை விற்பனைச் செய்தது தெரியவந்தது. இதன் மூலம் கடந்த 18 மாதங்களில் மட்டும் அந்த நபருக்கு ரூ.98 லட்சம் கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, அவர் ஒரே நாளில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்துள்ளார். அதன்படி, இதுவரை 1,25,460 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.
இந்த பீகார் இளைஞரின் சாஃப்ட்வேர் ஹேக்கிங் மூலம் அரசுக்கு 56 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்த நபர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.