இந்த வருட இறுதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்களை தமிழில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் முறையாக மருத்துவப் படிப்புக்கான பாடங்கள், மத்திய பிரதேசத்தில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல, உத்தரபிரதேச மாநிலத்திலும் மருத்துவம், இன்ஜினியரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகளில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (டி.என்.டி.இ.எஸ்.சி) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழ் வழி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கின்றன. மொழி பெயர்க்கும் பணிகளில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 30 பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்தப் பணியின் முதல் கட்டமாக, ‘கிரேஸ் அனாடமி பார் ஸ்டூடன்ஸ்’, ‘கைடன் அன்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி’, ‘பெய்லி அன்ட் லவ்ஸ் சாட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி(பாகம்-1)’, ‘முதலியார் அன்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ்டெட்ரைக்ஸ்’ ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 பாடப்புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட உள்ளதாகவும், அதில் 13 பாடப் புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த வருட டிசம்பர் மாதத்துக்கு முன்பு இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு படிக்க முடியும் என்றாலும், ஏற்கனவே உள்ள விதிகளின்படி, தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘சூரிய சக்தியில் பம்ப்செட்’ பிரதமர் மோடியையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயி!