ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரிழந்த தனது மனைவியை தோளில் பல கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சங்கிவலசாவில் உள்ள மருத்துவமனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பங்கி என்ற நபர் தனது மனைவியை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பங்கி மருத்துவமனையில் இருந்து ஆட்டோ வரவழைத்து மனைவியை ஏற்றிக்கொண்டு 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒடிசா மாநிலம், சொராதா கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியிலேயே பங்கியின் மனைவி இறந்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர் அவரை கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை பங்கி தனது தோளில் சுமந்தபடியே நடந்தார். இவ்வாறே அவர் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல, அவரைக் கண்ட பொதுமக்கள் உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பிறகு விரைந்து வந்த காவல்துறையினர் பங்கியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ஒடிசா மொழி பேசியதால், அம்மொழி பேசும் வேறொரு நபரை வரவழைத்து, அவர் மூலம் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து, பங்கி சொன்னதை வைத்து அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். காவல்துறையினருக்கும் அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கு நன்றி கூறி பங்கி அங்கிருந்து சென்றார்.
உயிரிழந்த தனது மனைவியின் உடலை கணவர் தோளில் பல கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற இந்தச் சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.
இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் செய்த சாதனை!