கர்நாடக மாநிலத்தில் கறுப்பாக இருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஜுவர்கியின் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல். இவருக்கும் யாத்கிரி மாவட்டம், ஷாஹாபூர் தாலூகாவைச் சேர்ந்த பர்சனா பேகம் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், காஜா படேல் மனைவி கறுப்பாக இருப்பதாக கூறி அவரை துன்புறுத்தியுள்ளார். காஜா படேல், பர்சனா பேகமை பல கேலி கிண்டல் செய்து காயப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, வரதட்சனை கேட்டும் அவரை காஜா படேல் கொடுமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பர்சனா தனது குடும்பத்திடம் கூறி அழுதுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பர்சனா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த பால் வியாபாரி ஒருவர் பர்சனாவின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பர்சனாவின் பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் மீட்டு உடன் அழைத்து சென்றனர். அதே சமயம், காஜா படேல் தனது குடும்பத்தோடு தப்பிச்சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த ஜுவர்கி காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காஜா படேலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழிக்கவே முடியல..ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூக்கம் – பெண்ணுக்கு வந்த சோதனை!