‘எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி எனக்கே மின்னஞ்சல் அனுப்பினார்கள்’ என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
ஸ்வேலி திக்சோ என்ற ட்விட்டர் ஐடியைக் கொண்ட நபர், ட்விட்டரில் தனது மடிக்கணினியை எடுத்த திருடனிடமிருந்து மின்னஞ்சல் ஒன்றை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்வேலி திக்சோ தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு அவர்கள் எனது மடிக்கணினியைத் திருடிவிட்டார்கள், அவர்கள் எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி எனக்கே மின்னஞ்சல் அனுப்பினார்கள், எனக்கு இப்போது கலவையான உணர்வுகள் உள்ளன” என்று மடிக்கணினி உரிமையாளர் பதிவிட்டுள்ளார். மேலும், இத்துடன் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருப்பதையும் படமாக இணைத்துள்ளார்.
அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றுள்ளதாவது,
“சகோதரரே, நான் நேற்று உங்கள் மடிக்கணினியைத் திருடிவிட்டேன் என்று எனக்குத் தெரியும். நான் வாழ்க்கையைச் சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதற்காகவே நான் உங்கள் மடிக்கணியை திருடினேன். மேலும், நீங்கள் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தில் மும்மரமாக இருந்ததை என்னால் அறியமுடிகிறது. ஆதலால், அந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கான கோப்புகளை நான் இதில் இணைத்துள்ளேன். மடிக்கணினியை விற்க நான் ஒரு வாடிக்கையாளரைக் கண்டுபிடித்துவிட்டதால், வேறு ஏதேனும் கோப்புகள் தேவைப்படுவதாக இருந்தால், திங்கள் கிழமை 12.00 க்கு முன் எனக்கு தெரியப்படுத்தவும்.’’
They stole my laptop last night and they sent me an email using my email, I have mixed emotions now.😩 pic.twitter.com/pYt6TVbV1J
— GOD GULUVA (@Zweli_Thixo) October 30, 2022
இவ்வாறு மடிக்கணியை திருடிய நபர் தெரிவித்துள்ளார்.
ஸ்வேலி திக்சோ-வின் ட்விட்டர் பதிவானது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ‘மீட்கும் பணிகளில் தொய்வுகள் இல்லை’ – மோர்பி பால விபத்து குறித்து மோடி பேச்சு