சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 8 ஆம் தேதி 11 மணி நேரம் நடை சாத்தப்பட உள்ளது.
சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02.39 மணி முதல் மாலை 06.19 வரை நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8.40 மூடப்படும். பிறகு, இரவு 07.30 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்தவுடன் திறக்கப்படும். அதவாது, திருப்பதி கோயில் 11 மணி நேரம் மூடியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் நடை சாத்தப்படுவதால், விஐபி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக கட்டண தரிசனத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யப்படும்.
இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை உயர்வு: வரவேற்பையும், கண்டனத்தையும் ஒரே மாதிரி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்!
இதேபோன்று மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதி கோயிலில் கிரகணம் நடைபெறும் நாட்களில் சமையல் செய்யப்படுவதில்லை. அதனால், அன்னப்பிரசாத கூடமும் சந்திர கிரகணம் முடியும் வரை மூடியே இருக்கும்.
இதன்காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திட்டமிட்டு வருமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதுபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8-ந்தேதி நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும் என்றும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும் என்றும், இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை சாத்தப்படும் எனவும் அதில் கூறப்பட்டுளள்து.